Thursday, November 23, 2006

<>ஐம்பெரும்விழா சிறப்பு வாழ்த்துரை...!<>

ஐம்பெரும்விழா சிறப்பு வாழ்த்துரை...!

-ஆல்பர்ட் ·பெர்னாண்டோ,
தலைவர்,
சீன தமிழ் வானொலி நேயர்மன்றம்,
அமெரிக்கா.
நெஞ்சம் இனிக்கும் இந்த ஐம்பெரும்விழாவிற்கு
வருகைதந்துள்ள சீன வானொலி பிரதிநிதிகள்
நால்வரையும் என் சார்பிலும் அமெரிக்க
நேயர்மன்றத்தின் சார்பிலும் இருகரம் கூப்பி
வருக, வெல்க, வாழ்கஎன வாழ்த்திடுவதில் மகிழ்வெய்துகிறேன்.

என்னுடல் மட்டும் அமெரிக்காவில்!

என்னுள்ளமெலாம் இந்தக் கஸ்தூரிபா கலையரங்கில்தான்!

இந்திய - சீன நட்புறவு ஆண்டுவிழா...நமது
சீன வானொலி பிரதிநிதிகள் திட்டமிட்டபடி
இங்கே வருவதில் சிறுதடை விசா பெறுவதில்
இருந்தும், "அருவினை யென்ப வுளவோ
கருவியாற் காலமறிந்து செயின்" என்ற வள்ளுவப் பெருந்தகையின்
"What is impossible for right means at the RIGHT TIME" என்பதற்கொப்ப தடைகளைத் தகர்த்து இங்கு
வந்திருக்கிறார்கள், நம்
தமிழ் பிரிவு தலைவர் கலையரசி அம்மையார்
அவர்களும் மற்ற பிரதிநிதிகளும்!

சீனாவுக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவை..நட்பை ஆண்டுவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
சீன- இந்திய நட்பு இன்று நேற்று ஏற்பட்டது
அல்ல; சற்றொப்ப 1400 ஆண்டுகளுக்கு முன்பாக
பண்டைக்கால சீனாவின் புகழ்பெற்ற பண்பாட்டுத்
தூதர் துறவி யுவான் சுவாங் காலத்தில் முகிழ்த்தது!

கி.பி627ல் யுவான் சுவாங்க் இந்தியாவில் அப்போது
புகழ்பெற்று விளங்கிய நாளந்தா பலகலைக்கழகத்தில்
கல்வி பயில தமது 27ம் வயதில் கால்நடையாக....
பொடிநடையாக காடுமேடு வனாந்திரங்களைக்
கடந்து அன்றைய சீனாவின் சாங் ஆனிலிருந்து
அதாவது இன்றைய மத்திய சீனாவின்
"சீ ஆன்" நகரிலிருந்து மனித நடமாட்டமில்லாத பாலைவனங்களையெல்லாம் கடந்து பல்வித
இன்னல்களைக் கடந்து கி.பி.629ம் ஆண்டு வட
இந்தியாவிற்கு வந்தார்.
(அப்படிப்பட்ட சிரமங்கள் ஏதும் இன்றி இன்றைக்கு
நமது சீன வானொலிப் பிரதிநிதிகள் இங்கு
வந்துள்ளனர். )

நாளந்தா பல்கலைக்கழகத்தில் தம் வண்ணக் கனவுகளுக்கு உயிர் கொடுத்தார் சுவாங்! எண்ணிவந்ததைவிட நம் பண்பாடும் விருந்தோம்பலும் அவரைப் பல்லாண்டுகள் தங்கவைத்த நட்புறவுப் பூமி இது! அவர் எழுதிய நூல்களே இதற்குச் சான்று.

பாஹியான் போன்ற யாத்ரிகர்களும் தங்கள் எழுதிய வரலாற்றுக்குறிப்புகள் நமது சீன-இந்திய நட்பை விரிவாக எடுத்து இயம்புகிறது.

சீன தேசத்தில் புகழ்பெற்ற நாவல்,

"மேற்கிற்கு சுற்றுலா"

இந்த நாவலின் கதாநாயகன் "தாங் சான் ச்சாங்"
என்ற பாத்திரம் சீன-இந்தியா நட்பை விலாவாரியாய் விவரிக்கிறது! அப்போது முகிழ்த்த உறவில் இடையில் சிறுவிரிசல் கண்டாலும் கடல் வாணிகத்தின் மூலம்
இருநாட்டு உறவுகளுக்கும் அப்போதே சிறகு முளைத்ததை எவராலும் மறுத்துவிடமுடியாது! இரண்டு தேசங்களும் மிகப்பழைய பாரம்பரியங்களுக்குச் சொந்தமானவை!

இரண்டு வேறுபட்ட நாகரிகங்களிலிருந்து கிளைத்தவை!
இரு தேசங்களுமே கிராமப்புறங்களும் விவசாயிகளையும் மிகுதியாகக் கொண்டவை!

அதிவேக நவீனத் தொழில்நுட்பத்தோடும், தொழிலும் வணிகமும் புரிபவை! பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்பவை!

ஒருசேர முன்னிலை வகிப்பது உலகின் அதிக மக்கள் தொகையில்!

பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய சீன வணிக மதிப்பு
ரூ.500 கோடி! இதுவே 2005ல் ரூ.8,500 கோடி! நடப்பு
ஆண்டில் இதுவே ரூ.90ஆயிரம் கோடியாகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2010ல் இதன் இலக்கு
ரூ.2.25இலட்சம் கோடியென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் இருதேசங்களும் நட்பை வளர்த்து
தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டியது அத்தியாவசியம்
என்று கருதியதால்தான் சீனத்தலைவர் ஹ¥ சிந்தாவ்
இந்தியா வந்ததும்,"கையோடு கை சேர்த்து ஒத்துழைப்பை விரிவாக்கி, அருமையான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்குவது" என்ற அவரது சொற்பொழிவு!

சீன-இந்திய நட்புறவு, இரு தரப்புகளுக்குச் சாதகமானது! ஆசியாவிற்கும் உலகிற்கும் நன்மை பயக்கும்; சீன-இந்திய உறவு இருதரப்பு வரம்பைத் தாண்டி, உலக முக்கியத்துவம் வாய்ந்தது என்ற அவரது உரை அவரது மனவெளிப்பாடு மட்டுமல்ல; இரு தேசத்தின் நட்புறவில் மலர்ந்த காலத்தின் தேவை கருதிய சத்தியமான வார்த்தைகள் என்பதில் எள் முனையளவும் அய்யமில்லை!

இருதேசங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக சிக்கிம்
மாநிலத்தினையும் சீனாவின் திபெத் சுயாட்சிப்
பகுதியையும் இணைக்கும் நாதுல்லா கணவாய் கடந்த 44 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலைத் திங்கள் 6ம் நாள் திறக்கப்பட்டதில் இந்த உறவுக்கு புதியபாலம்
உதயமாகியுள்ளது தொடரும் என்ற பேருவகையை நமக்கு அளிக்கிறது.

சீன-இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய தருணமிது என்றால் அது மிகையில்லை.

சீன வானொலியின் 65ம் ஆண்டுவிழா!
பீகிங் வானொலியாய் உதயமாகி BE-KING போல
உலக வானொலிகளின் அரசனாக வீர நடை
போட்டு 40க்கும் மேற்பட்ட அந்நிய மொழிகளில்
அட்டகாசமாய் உலகை வலம்வருகிறது! உலக நேயர்களிடமிருந்து வரும் நேயர் கடிதங்களின்
எண்ணிக்கை உலகின் வேறு எந்த வானொலிக்கும்
வராத மிக அதிக அளவில் வந்து குவிகின்றது.
இதுவே அதன் பலம்! அதன் வெற்றி!

சீன வானொலியின் ஒலிபரப்புப் பணியில் இது ஒரு சரித்திரச் சாதனை மைல் கல்!


சீன வானொலி துவக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்குப்
பின் தமிழ் பிரிவு துவக்கப்பட்டு 43 விழுதுகள்
விட்டு பழுதுகள் இல்லாமல் பணி தொடர்ந்து
இன்றைக்கு சீன வானொலி தமிழ் பிரிவு தலைவர் திருமதி.கலையரசி அம்மையாரயும் மற்ற மொழிப் பிரதிநிதிகளையும் தமிழகம் நோக்கி எத்தனை
தடை வந்தாலும் அதையும் தாண்டி தமிழ்
நேயர்களைச் சந்திப்போம் என்று ஈங்கு
வந்துள்ளதே இதன் வெற்றியை பறை
சாற்றுகிறது என்பது அப்பழுக்கற்ற உண்மை!

தமிழகத்தில் நானறிந்தவரை நடிகநடிகையர்களுக்கு ரசிகர்மன்றங்கள் இருக்கிறது. நற்பணிமன்றங்கள்
இருக்கின்றன. ஆனால் வானொலிக்காக நேயர்கள்
இருக்கலாம்; மன்றங்கள் இருக்கிறதா என்றால்
நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.

வானொலியின் விவசாய நிகழ்ச்சிக்காக
மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டிக்கொண்டிருக்கிற சூழலில் அகில இந்திய சீன வானொலியின் தமிழ் நேயர்மன்றங்கள் தமிழக
மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டிருப்பது
சீன வானொலி மட்டுமே என்றுஅறுதியிட்டு
உறுதியாகச் சொல்ல முடியும்!

இதற்கு காரணம் அ.இ.சீன வானொலி தலைமை
மன்றத் தலைவர்வளவனூர் திரு.செல்வம் மற்றும்
அதன் நிர்வாகிகள் மற்றும் நேயர்மன்ற தலைவர் பொறுப்பாளர்களையே சாரும்! இவர்களின்
தூண்டுதலால் ஆர்வமாய் சீன வானொலியைச்
செவிமடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து
நேயர்மன்றங்கள் உருவாகி உற்சாக
நடைபோடுகின்றன.

இப்படிப்பட்ட தன்னார்வலர்களால் உருவாகிய
நேசமிகு நேயர்மன்றங்களை ஒருங்கிணைத்து ஓரமைப்பாக..பேரமைப்பாக ஏற்படுத்தி அகில
இந்திய சீனவானொலி நேயர்மன்றம் துவங்கித்
தொய்வின்றி தொடர்ந்து துள்ளல் நடைபோட்டு
20 நிதர்சன ஆண்டுகளைக் கடந்து வாலிபமுறுக்கோடு திகழ்வதைக் கொண்டாடுகிறோம்.

இதன் மூலவராய் உற்சவமூர்த்தியாய்த் திகழும்
வளவனூர் செல்வம் அவர்களுக்கு இந்தநேரத்தில்
பலத்த கரவொலி எழுப்பி அவருக்கு உற்சாகம் ஊட்டுவோம்!


அ.இ.சீன.வானொலி நேயர்கள் மன்ற 18வது கருத்தரங்கு! உற்சாகப் பெருவெள்ளமாய் இதோ!
இந்தக் கருத்தரங்கம் என்பது தேனூறும் நிகழ்வன்றோ!
இங்கு அமர்ந்திருக்கின்ற ஒவ்வொரு நேயரும்
மத்தாப்பூவாய் மலர்ந்து சிரிக்கும் முகங்களோடு!
சீன வானொலித் தமிழ் பிரிவுத்தலைவர் நம் பாசமும்
நேசமும் நிறைந்த திருமதி கலையரசி என்ற
ஜு ஜுவான் குவா மற்றும் சீன வானொலி தென்
ஆசிய மொழிப்பிரிவு துணைத்தலைவர் திரு.சுன்
ஜியான் ஹி, நேபாள பிரிவு தலைவர் திருமதி.ஜங் யு,
சிங்கள மொழிப்பிரிவு துணைத்தலைவர் செங் லி
ஆகியோர் நம் விருந்தினர் என்று அவர்களை வரவேற்று உபசரிக்கும் உத்வேகத்தோடு வெள்ளத்தின் பெருக்கைப்போல் இக் கருத்தரங்கில் வீற்றிருக்கிற உங்கள் ஒவ்வொருவருக்கும் எனதினிய அன்பு மலர்த்தூவல்கள்!

இந்த ஐம்பெரும் விழா இங்கே அமைந்திட இரவு பகல் பாராது உழைத்து கண்களில் மின்னும் களைப்பையும் சோர்வையும் மீறி இதழ்கடை முறுவலோடு பம்பரமாய்ச் சுறுசுறுப்போடு சுழலும் பல்லவி.கே.பரமசிவன் அவர்களுக்கான என் அடிமனத்து வாழ்த்துக்களோடு எழுப்புங்கள் உங்கள் கரவொலிதனை!

அடுத்த கருத்தரங்கத்திற்கு முன்பாக நேயர்மன்றம்
இல்லாத மாவட்டங்களில் அருகிலுள்ள மாவட்டத்தைச்
சேர்ந்த நேயர்மன்றம் பொறுப்பெடுத்து நேயர்மன்றத்தை உருவாக்கவும், நேயர்மன்றம் இல்லாத மாவட்டமே இல்லையென்ற நிலை உருவாக்கிடவும் முன்
வரவேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள்
முன் வைக்கிற அதே வேளை, நான் முன்னமே
அளித்த வாக்குறுதியின்படி ஒவ்வொரு நேயர்
மன்றத்துக்கும் ஒவ்வொரு இணையப்பக்கத்தை
உருவாக்கித் தருவேன் என்ற மகிழ்ச்சியான
செய்தியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் உங்கள் கருத்துக்கள் சீன வானொலியை உடனுக்குடன் எட்டும் வகையில் இருக்கும்!

மீண்டும் இந்த ஐம்பெரும் விழா வெற்றிபெறவும்
இதற்கு மூலகாரனமாய் இருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னினிய வாழ்த்துக்கள்.

நன்றி.(ச்சியே..ச்சியே) வணக்கம்!